கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (31) நண்பகல் 12 மணியளவில் ஏறாவூர்பற்று – செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய சேவைக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துதல், MN-5 சம்பள அளவுத்திட்டம் தொடர்பில் நியாயமான தீர்வை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், உயர் தரம் மற்றும் சிறப்புத் தரத்திற்கான தொழில் முன்னேற்ற வாய்ப்புகளை உறுதி செய்தல், பதவி உயர்வு மற்றும் தொழில் முன்னேற்றம் தொடர்பான நிலுவைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் ஆகிய கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கடமைகள், பொறுப்புகள் மற்றும் நிர்வாகப் பங்களிப்புகளை முறையாக பிரதிபலிக்கும் வகையில் பொருத்தமான சேவைக் கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கையில் பதாதைகளை ஏந்தியவாறு பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய உத்தியோகத்தர்கள், தமது கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வை வழங்குமாறு வலியுறுத்தினர்.

















