மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.
இன்றைய தினம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளாகக் குறிப்பிடப்படும் முகமட் சிபான், முகமட் சகீத் ஆகிய மூவரும் சிறைச்சாலைகளில் இருந்து இணையவழி காணொளி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு கல்லடி பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், காத்தான்குடியில் ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டு இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் வவுணதீவு, கரையாக்கன்தீவு பகுதியில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பிலேயே இந்த வழக்கு இடம்பெற்று வருகிறது.
குறித்த கொலைச் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இதனையடுத்து, சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, வழக்கு விசாரணையின்போது லண்டனில் இருப்பதாகக் கூறப்படும் மற்றுமொரு சந்தேகநபருக்கு எதிராக தொடர்ந்தும் பிடியாணை பிறப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








