ஹெட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, ரம்பாதெனிய பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள பெரிய பாறைகள் மற்றும் மரங்கள் பிரதான வீதியில் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக கினிகத்தேனை பகுதியில் பெய்து வரும் கடும் மழையால், குறித்த வனப்பகுதியிலிருந்து மண் மற்றும் பாறைகள் பிரதான வீதியில் சரிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக வீதிப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதியில் சரிந்து விழுந்த மண் மற்றும் பாறைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், தற்போது வீதியை நோக்கி சரிந்து விழும் நிலையில் காணப்படும் ஏனைய பாரிய பாறைகள் மற்றும் மரங்களை அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தினமும் அதிகளவான வாகனங்கள் பயணிக்கும் முக்கியமான வீதியாக இது காணப்படுவதால், அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
வீதிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ள பாறைகள் மற்றும் மரங்களை உடனடியாக அகற்றி, வீதிப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








