முன்மொழியப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமா என்பதை தீர்மானிக்க உயர் நீதிமன்றத்திற்கு இன்று (01) முதல் மூன்று வார கால அவகாசம் உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் உயர் நீதிமன்றம் பரிசீலித்த பின்னர், தனது தீர்மானத்தை பாராளுமன்றத்திற்கு அறிவிக்கும் என குறிப்பிட்டார்.

22வது அரசியலமைப்புத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் மாத்திரம் நிறைவேற்ற முடியுமா அல்லது அதற்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டுமா என்பதை உயர் நீதிமன்றமே தீர்மானிக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்கமோ அல்லது எதிர்க்கட்சியோ கோரிக்கை விடுத்தாலும், உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்றி குறித்த அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியாது எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.







