தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த தந்தை செல்வாவின் சமாதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இனந்தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை – அராலி வீதியில் அமைந்துள்ள தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போருக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த குறித்த நினைவுத் தூபி, 2012ஆம் ஆண்டு மீண்டும் புனரமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அது தற்போது திட்டமிட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் மற்றும் அயலவர்கள் வலி. வடக்கு பிரதேச சபையின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
நினைவுத் தூபியை சேதப்படுத்தியவர்களை உடனடியாக அடையாளம் கண்டு, சட்டத்தின் முன் நிறுத்துவதுடன், சேதமடைந்த நினைவுத் தூபியை மீண்டும் புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.














