எல்-நினோ காலநிலை தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் நான்காவது கூட்டம் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
எல்-நினோ தாக்கத்தால் வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், காலநிலை மாற்றத்தால் மரக்கறி மற்றும் பழச்செய்கைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கும், நாட்டில் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஆலோசிக்கப்பட்டது.
தற்போது ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் எல்-நினோ தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் தடையற்ற நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்களின் முன்னேற்றமும் கூட்டத்தில் மீளாய்வு செய்யப்பட்டது.
மேலும், பெரும்போகத்தை ஆரம்பிப்பது தொடர்பான தெளிவுபடுத்தல்களை வழங்கும் ஊடகவியலாளர் சந்திப்பை செப்டம்பர் 4ஆம் திகதி நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இதனுடன், எல்-நினோ தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆறு மாவட்டங்களின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ‘சூம்’ தொழில்நுட்பம் ஊடாக கலந்துரையாடல் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
விசேட அமைச்சரவை உபகுழுவின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.








