போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்ந்தும் நீடித்து வருவதாக யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கு. செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
மறைந்த இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாசின் நினைவு தின நிகழ்வு நேற்று (02.09.2026) யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் பகுதிகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தமிழ் ஊடகவியலாளர்களே தொடர்ந்தும் வெளிக்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், தென்னிலங்கை ஊடகங்கள் பல சந்தர்ப்பங்களில் அவற்றை வெளிப்படுத்தத் தவறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருந்தால், தமிழ் மக்கள் தற்போதைய அரசாங்கத்தை தங்களுடைய அரசாங்கமாகக் கருதியிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், அரச ஊடக நிறுவனங்களில் நேர்மையாகப் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வெளியேற்றப்படும் நிலை காணப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டங்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் போராட்டங்கள் தொடர்பில் செய்தி சேகரித்தமை உள்ளிட்ட காரணங்களைக் குறிப்பிட்டு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் அரச ஊடக நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டமை இதற்கு உதாரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் இடம்பெறும் உண்மையான சம்பவங்களை எவ்வித மறைப்புமின்றி மக்களிடம் கொண்டு செல்வதே ஊடகவியலாளர்களின் கடமை என வலியுறுத்திய கு. செல்வகுமார், தங்களுக்கு எதிரான விடயங்கள் வெளிவராத வகையில் செய்திகளைத் தணிக்கை செய்யும் போக்கு அரச ஊடக நிறுவனங்களில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
சுதந்திரமாக செய்தி அறிக்கையிடுவதற்கு தடைகளை ஏற்படுத்தி, ஊடகவியலாளர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் செயற்பாடுகள் ஜனநாயக நாட்டின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானவை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.








