வெல்லம்பிட்டி பகுதியில் இலங்கை கடற்படையினரும் மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில், சட்டவிரோதமாக விற்பனை செய்யத் தயாராக வைத்திருந்த வெளிநாட்டு இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு கடற்படை கட்டளையின் கீழுள்ள இலங்கை கடற்படை கப்பலான ‘ரங்கல’ கப்பலின் அதிகாரிகளும் மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து கடந்த 1ஆம் திகதி வெல்லம்பிட்டி பகுதியில் இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை சோதனையிட்ட அதிகாரிகள், அதிலிருந்து 130 சட்டவிரோத இலத்திரனியல் சிகரெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். குறித்த சிகரெட்டுகளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் காரும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட கார் மற்றும் இலத்திரனியல் சிகரெட்டுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.








