ஸ்பெயினின் கனாரியா தீவுகளில் ஒன்றான கிரான் கனாரியா அருகே குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 128 பேருடன் பயணித்ததாகக் கூறப்படும் குறித்த படகு ஆபத்தான நிலையில் இருப்பதாக அவசர சேவைப் பிரிவினருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் உடனடியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தகவல் கிடைத்ததும் கடலோரக் காவல்படையினர் மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். எனினும், கடலில் நிலவிய கடுமையான காலநிலை மற்றும் அலைச்சல் காரணமாக மீட்புப் பணிகளில் பெரும் சிரமம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், மேலும் சிலர் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்கப்பட்டவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்காவில் இருந்து கனாரியா தீவுகளை நோக்கி ஆபத்தான கடல் வழியாக பயணிக்கும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற படகு விபத்துகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் அடையாளங்களை உறுதிப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.







