யாழ்ப்பாணம் – நாகர்கோயில் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முருகையா தேவஸ்தானத்தின் வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில், மாம்பழம் ஒன்று 11 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று (02) இடம்பெற்ற மாம்பழத் திருவிழாவில் இந்த ஏலம் நடைபெற்றுள்ளது.
மாம்பழத்தை ஏலத்தில் பெறுவதற்காக பக்தர்களிடையே கடும் போட்டி நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் இறுதியில், குறித்த மாம்பழம் 11 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஒன்று 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போன நிலையில், இம்முறை ஏலத்தொகை ஒரு இலட்சம் ரூபாயால் அதிகரித்துள்ளது.
ஏலத்தின் மூலம் கிடைக்கும் முழுத் தொகையும் ஆலயத்தின் திருப்பணி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.







