டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மீறி, சாரதிகளுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
இன்று (03) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், பாதுக்கை மற்றும் கம்பஹா பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த சில அதிகாரிகள் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதனையடுத்து, R.T.M. 93 சட்டத்தின் கீழ் 2026.05.05 அன்று வெளியிடப்பட்ட மேலதிக செய்தியின் மூலம் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நாட்டின் முன்னணி 14 காப்புறுதி நிறுவனங்கள் வழங்கும் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளுக்கு முழுமையான சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சாரதியிடம் டிஜிட்டல் காப்புறுதி அட்டை இல்லாத சந்தர்ப்பங்களிலும், காப்புறுதி பாதுகாப்பு செல்லுபடியாக உள்ளதா என்பதை பொலிஸ் அதிகாரிகள் இலவச சேவைகள் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
- *1338# சேவையைப் பயன்படுத்தி காப்புறுதி இலக்கம் அல்லது வாகன இலக்கத்தை உள்ளிட்டு உடனடியாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
- 1338 என்ற இலக்கத்திற்கு SMS அனுப்பி தகவல்களைப் பெறலாம்.
- 1338 உடனடி அழைப்பு மையத்தைத் தொடர்புகொண்டு காப்புறுதி தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
இதற்கமைய, நாடு முழுவதும் உள்ள 607 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ஊடாக கீழ்நிலை அதிகாரிகளுக்கு மீண்டும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் டிஜிட்டல் காப்புறுதி அட்டையை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியிடம் அல்லது போக்குவரத்து தலைமையகத்தின் 070 47 55 600 என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர மேலும் தெரிவித்தார்.







