ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை இன்று (07) முன்வைக்கப்படவுள்ளது.
ஒரு மாத காலம் நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் எழுத்துமூல புதுப்பிக்கப்பட்ட அறிக்கையும் இக்கூட்டத்தொடரில் பரிசீலிக்கப்படவுள்ளது.
இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் சமூக ஆற்றுப்படுத்தலை முன்னெடுக்கவும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தொடர்ச்சியான பயன்பாடு, தன்னிச்சையான கைதுகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான கண்காணிப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் அறிக்கையில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் தண்டனை விலக்கு கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவர மேலும் பல நடவடிக்கைகள் அவசியம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.








