தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு காரொன்று இன்று (07) காலை பாதுகாப்பு வேலியுடன் மோதி விபத்துக்குள்ளானது. தொடங்கொட பகுதியில் 32.4 கிலோமீட்டர் இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றுவிட்டு மீண்டும் மாத்தறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இந்த வாகனம், பராமரிப்புப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த வீதித் தடுப்புகளில் முதலில் மோதியதாகவும், தொடர்ந்து முன்னேறிச் சென்று நெடுஞ்சாலையின் நடுவிலுள்ள பாதுகாப்பு வேலியுடன் மோதியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் காரில் பயணித்த பெண் ஒருவர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார். மோதலின் தாக்கத்தால் பாதுகாப்பு வேலி, வீதித் தடுப்புகள் மற்றும் கார் ஆகியவற்றுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







