மட்டக்களப்பில் அரச திணைக்களத்துக்குச் சொந்தமான வாகனத்தை பயன்படுத்தி மதுபானம் அருந்தியதாக வன பரிபாலன சபையைச் சேர்ந்த இரு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (06) அரச திணைக்களங்களுக்கு விடுமுறை தினமாக இருந்த நிலையில், வன பரிபாலன சபைக்குச் சொந்தமான டபிள் கப் வாகனத்தில் பயணித்த இருவர், பாலமீன்மடுவில் அமைந்துள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் வாகனத்தை நிறுத்தி மதுபானம் அருந்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, குறித்த இருவரும் திணைக்கள சீருடையில் இருந்ததாகவும், பின்னர் மதுபோதையில் அரச வாகனத்தை செலுத்திச் சென்றதாகவும் மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
அரச வாகனம் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தப்பட்டதுடன், அதனை மதுபானம் அருந்துவதற்கும் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.








