தாய்லாந்திற்குள் நுழைவதற்கு இலங்கையர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த விசா அற்ற அனுமதி வசதி ரத்து செய்யப்பட்டமைக்கான முதன்மைக் காரணம், இலங்கைப் பிரஜைகள் தாய்லாந்தில் மேற்கொண்ட சட்டவிரோத செயல்களே எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் விஜித ஹேரத்.
இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், இலங்கைப் பிரஜைகள் தாய்லாந்தில் புரிந்த பல்வேறு சட்டவிரோத செயல்கள் காரணமாகவே இந்த விசா அற்ற அனுமதி வசதி இழக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
.

தாய்லாந்திற்கு நுழையும்போது கிடைத்திருந்த விசா அற்ற நுழைவு வசதியை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ரத்து செய்ய தாய்லாந்து தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, செப்டம்பர் 15ஆம் திகதிக்குப் பின்னர் தாய்லாந்து நோக்கிப் பயணிக்கவிருக்கும் அனைத்து இலங்கையர்களும், பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் விசா அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாகும்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், தாய்லாந்தின் இந்தத் தீர்மானம் குறித்து தாய்லாந்து அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்டார். இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே இது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த இருதரப்பு ஒப்பந்தத்தின் மூலம், மீண்டும் இலங்கைக்கான விசா அற்ற வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் கூறினார்.








