நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிப்படுத்தும் வகையில், சுகாதாரத் துறையை மூன்று முக்கியப் பிரிவுகளின் கீழ் வலுப்படுத்தி வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நவீன இருதய சிகிச்சைத் தொகுதியின் நிர்மாணப் பணிகளை நேற்று (16) ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இலவச சுகாதார சேவையை மக்களுக்கு மேலும் நெருக்கமாக்குதல், நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்துதல், முறையான முகாமைத்துவ கட்டமைப்பை உருவாக்குதல் ஆகிய மூன்று முக்கிய விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகாமைத்துவ நிறுவனத்தின் (JICA) கடன் உதவியின் கீழ் 3,545 மில்லியன் ரூபாய் செலவில், எட்டு மாடிகளைக் கொண்டதாக இந்த நவீன இருதய சிகிச்சைத் தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்தத் தொகுதி நிறைவடைந்த பின்னர், பிரதேச மக்களுக்கு நவீன இருதய நோய் சிகிச்சை மற்றும் இருதய-மார்பு சத்திரசிகிச்சை வசதிகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
மேலும், இருதய தீவிர சிகிச்சைப் பிரிவுகள், ICU வசதிகள், கெதீட்டர் பரிசோதனைக் கூடங்கள், X-Ray, ECG வசதிகள், விசேட சிகிச்சைப் பிரிவுகள், வாட்டுத் தொகுதிகள், ஆய்வுக்கூடங்கள், கேட்போர் கூடம் மற்றும் நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இந்தத் தொகுதியில் ஏற்படுத்தப்படவுள்ளன.
இத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை 18 மாதங்களுக்குள் நிறைவு செய்து மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மேலும் பல அபிவிருத்திப் பணிகளுக்காக 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளில் சுமார் 19,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திட்டங்களை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது முன்னெடுக்கப்படும் திட்டங்களுடன் இணைந்து, அநுராதபுரம் வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக 34,000 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து தற்போது குறிப்பிடத்தக்க அளவில் ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் பிரதிபலிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனக் கூறியுள்ளார்.
அதேபோன்று, கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளின் வளர்ச்சி முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான வாழ்க்கையே மக்களின் மிக முக்கியமான செல்வமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலவச சுகாதார சேவைகளை மக்களுக்கு மேலும் நெருக்கமாக்குவதற்காக “ஆரோக்கியா” வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப, இலங்கையிலும் நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் மேம்பட்ட சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இதனுடன், சுகாதாரத் துறையில் சிறந்த முகாமைத்துவ முறையொன்றை உருவாக்குவதும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.








