முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் தமது ஆயுதங்களை இளைஞர்களிடம் கையளிக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 15 ஆம் திகதி இடம்பெற்றபோது, பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளையடுத்து ரவிகரன் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
விசுவமடு நெத்தலியாறு தொடக்கம் மன்னாகண்டல், கெரடமடு பகுதிகள் வரை சட்டவிரோத மணல் அகழ்வு அதிகளவில் இடம்பெறுவதாகவும், பொலிஸாரிடம் முறைப்பாடுகள் வழங்கப்பட்ட போதிலும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை எனவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார். சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் கையூட்டு பெறுவதாக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த ரவிகரன், மணற்கொள்ளை, மணற்கடத்தல், கசிப்பு, கஞ்சா, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறினார்.
மேலும், விடுதலைப் புலிகளின் காலத்தில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் அதிகளவில் இருக்கவில்லை எனவும், அக்காலத்தில் இரவு நேரங்களிலும் பெண்கள் பாதுகாப்பாக நடமாடக்கூடிய நிலை காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸார் தவறினால், இந்த விடயங்களை நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக முன்வைப்பேன் எனவும் ரவிகரன் கூறினார்.
இதேவேளை, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் 75 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மட்டுமே கடமையில் உள்ள நிலையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை கசிப்பு உற்பத்தி தொடர்பில் 702 வழக்குகள், ஐஸ் தொடர்பில் 91 வழக்குகள், சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் 69 வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெறுவதாகவும், அவ்வாறானவர்கள் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த ரவிகரன், சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்ற நிலையில், அவற்றை கட்டுப்படுத்த முடியாவிட்டால் பொலிஸார் தமது ஆயுதங்களை தங்களிடம் கையளிக்கட்டும் எனவும், அவற்றைக் கட்டுப்படுத்தும் வல்லமை தமது இளைஞர், யுவதிகளிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.








