மட்டக்குளியில் மூன்று பேர் உயிரிழப்பதற்குக் காரணமான விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி, விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கஞ்சா போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட காரின் சாரதியிடம் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது இந்த விடயம் உறுதியாகியுள்ளது.
மட்டக்குளி பகுதியில் காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதி நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் என்பதுடன், அவர்கள் கிரான்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேகமாகப் பயணித்த கார் ஒன்று, வீதியில் இருந்த 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பிரதேச மக்கள், காயமடைந்தவர்களைக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில், தற்போது 10 பேர் வரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








