2019 உலகக்கோப்பை சாம்பியன் அணியான இங்கிலாந்து, இந்த உலகக்கோப்பை தொடரில் மோசமாக செயல்பட்டு வரும் நிலையில், இலங்கை அணி குறித்து தப்புக் கணக்கு போட்டு தான் தோல்வி அடைந்ததாக இலங்கை அணி வீரர் மகீஷ் தீக்ஷனா பேட்டியில் கூறி இருக்கிறார். இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இரண்டுமே நான்கு போட்டிகளில் ஆடி அதில் மூன்றில் தோல்வி அடைந்த நிலையில் லீக் போட்டியில் மோதின. அந்தப் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி வெறும் 156 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி அந்த இலக்கை 25.2 ஓவரில் எல்லாம் எட்டி பெரிய வெற்றியை பதிவு செய்தது. தீக்ஷனா இந்தப் போட்டியில் தன் ஸ்பின் பந்துவீச்சால் இங்கிலாந்து அணியை திணற வைத்தார். 8.2 ஓவரில் வெறும் 21 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இந்த வெற்றிக்கு பின் பேசிய தீக்ஷனா, இங்கிலாந்து அணி இலங்கையை குறைத்து மதிப்பிட்டு விட்டதாக கூறி இருக்கிறார்.
மகீஷ் தீக்ஷனா இது பற்றி பேசுகையில், “நாங்கள் மூன்று ஆட்டங்களில் தோற்று, நெதர்லாந்திற்கு எதிராக மட்டுமே வெற்றி பெற்றதால் அவர்கள் எங்கள் அணியை குறைத்து மதிப்பிட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் எங்களை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள்” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், “எங்கள் பலத்தை நாங்கள் நம்பியதால் முடிவு எங்கள் பக்கம் இருந்தது. நாங்கள் ஒரு எளிய திட்டத்துடன் சென்றோம். அதனால்தான் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றோம். இதுவரை நாங்கள் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் ஒரு அணியாக எங்களது நம்பிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த போட்டி நாங்கள் மிகவும் மகிழ்ச்சியான வெற்றியைப் பெற்ற போட்டியாகும். ஒரு அணியாக, வரும் நான்கு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேற விரும்புகிறோம்.” என மகீஷ் தீக்ஷனா கூறினார் .