பெப்ரவரி மாதம் 23, 24 ஆம் திகதிகளில் கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா சிறப்பாக இடம் பெறவுள்ள நிலையில் குறித்த ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் முன்னேற்பாட்டு கூட்டம் நேற்று (23) இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில், இவ்வருடம் இலங்கையிலிருந்து 4,000 பக்தர்களும் இந்தியாவில் இருந்து 4,000 பக்தர்களும் பங்குபற்ற அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு பங்குபற்றுவோருக்கான சுகாதாரம், போக்குவரத்து உட்பட அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, ஏற்பாடுகள் மற்றும் உணவு வழங்கல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
மாவட்ட அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த முன்னாயத்த கூட்டத்தில் யாழ். இந்திய துணைத் தூதுவராலய அதிகாரிகள், நெடுந்தீவு பிரதேச செயலர், நெடுந்தீவு பங்குத்தந்தை, யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் கடற்படையின் பிராந்திய பொறுப்பதிகாரி பொலிஸ் உயர் அதிகாரிகள் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் துறைசார் திணைக்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.








