கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை கண்டித்தும், அவரை மீண்டும் வாகரை பிரதேச செயலகத்தில் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி பிரதேச மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (24) மேற்கொள்ளப்பட்டது.
பிரதேச செயலாளர் ஜீ.அருணன் அரசியல் பழிவாங்களுக்குள்ளாக்கப்பட்டு நேற்று (24) தொடக்கம் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்ட்டுள்ளதாகவும், இவர் தங்களது பிரதேச செயலகத்திற்கு மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த விடயம் தொடர்பாக கேள்வியுற்றவர்கள் நேற்று காலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
எங்கள் பிரதேச செயலாளாரின் இடமாற்றத்தை அரசு கவனத்தில் எடுக்குமா?
பிரதேச செயலாளர் சேவைக் காலம் முடியாமல் இடமாற்றம் செய்யக் காரணம் என்ன?
வாகரை பிரதேச மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றிய பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். என்பன போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.
இதன்போது வாகரை பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டதுடன், பிரதேச செயலக வாயிலை மூடி குழப்ப நிலை ஏற்படாதவாறு கடமையில் ஈடுபட்டனர்.
இதன்போது 2 மணித்தியாலங்கள் பிரதேச செயலக நிர்வாகப் பணிகள் தடைப்பட்டு காணப்பட்டது.
போராட்டத்தின் இறுதியில் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை அரசாங்க அதிபர், பொது நிர்வாக அமைச்சு,பிரதமர்,ஜனாதிபதி உள்ளிட்டோர்களுக்கு முகவரியிட்டு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்த்தர் வ.சிவரஞ்சனிடம் வழங்கினார்கள். அதனை பெற்றுக்கொண்டவர் இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைக்காக மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு தெரியப்படுத்துவதாக ஊடகங்களுக்கு தமது கருத்தினை தெரிவித்தார்.
அதேசமயம் பிரதேச மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒண்றிணைந்து இவ் போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.