உலக சந்தையில் எரிபொருள் விலைகள் குறைந்துள்ள போதிலும், அதற்கேற்ப உள்நாட்டில் எரிபொருள் விலைகளைக் குறைப்பதற்கு தற்போதைக்கு சாத்தியமில்லை என தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தற்போது நாட்டில் பயன்படுத்தப்பட்டு வரும் எரிபொருள், முன்னதாக அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கையிருப்புகளிலிருந்து விநியோகிக்கப்படுவதால், அவை தீரும் வரை விலைக் குறைப்பை மேற்கொள்ள முடியாது என அமைச்சர் விளக்கமளித்தார்.
எனினும், அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் கையிருப்புகள் நிறைவடைந்த பின்னர் விலை தொடர்பில் முடிவு எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், குறைந்த விலையிலான எரிபொருள் எதிர்காலத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதற்குப் பிறகு தற்போதைய விலையைத் தொடர்வதா அல்லது விலையைக் குறைப்பதா என்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.








