கொட்டக்கலை நகரிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று (17) இடம்பெற்ற மோதலை கட்டுப்படுத்தச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை வட்டக்கொட பகுதியைச் சேர்ந்த குழுவொன்றின் திருமண நிகழ்வில், மதுபோதையில் இருந்த இரு தரப்பினருக்கு இடையே மாலை சுமார் 4.00 மணியளவில் மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை கட்டுப்படுத்த முயன்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டு காயமடைந்ததுடன், பின்னர் உதவிக்காக வந்த திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினரும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் தாக்குதலில் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை கைது செய்ய பிரதேசவாசிகளும் பொலிஸாருக்கு உதவியதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மோதலில் ஈடுபட்ட மூவர் கொட்டக்கலை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தையடுத்து கொட்டக்கலை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த தலவாக்கலை, லிந்துலை மற்றும் நானுஓயா பொலிஸ் நிலையங்களிலிருந்து மேலதிக பொலிஸ் குழுக்கள் வரவழைக்கப்பட்டன.








