நாட்டில் நாளையதினம் (20) வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவித்துள்ளது.
அதன்படி, மேல், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் நாளையதினம் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எனவே குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் போதுமான அளவு நீரை குடிக்குமாறும், முடிந்தவரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தற்போது நிலவும் வெப்பநிலை குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என குழந்தை நல விசேட வைத்திய நிபுணர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்துரைத்த அவர், உலகளாவிய ரீதியிலும் தற்போது வெப்பநிலையின் அளவு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் ,வெப்பமான காலநிலை காரணமாக பணியிடங்களில் இருக்கும் போது அதிக நீரை பருகுமாறும், வீடுகளில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.