தம்மை கைது செய்வதையோ தடுத்து வைப்பதையோ தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள ரிட் மனு தொடர்பான மேலதிக பரிசீலனை இன்று (23) மேன்முறையீட்டு நீதிமன்றில் நடைபெறுகிறது.
இதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நீதிமன்றில் நேரில் ஆஜராகியுள்ளார்.
இந்த மனு, கடந்த 9ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் நான்காவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. அப்போது மேலதிக பரிசீலனைக்காக வழக்கு இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட தரப்பினருக்காக முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், மனுதாரர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக, ஷானி அபேசேகர பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டார் என்பதை நிரூபிக்கும் எந்தவித சாட்சியங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என வாதிட்டார்.
குறித்த மனு தொடர்பான மேலதிக பரிசீலனைகள் தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றன.








