மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் (09) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தினால் குருக்கள்மடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபத்தை திறந்து மக்கள் பாவனைக்கு விடுதல், கோட்டைக்கல்லாறு கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் கலாசார மண்டபத்தின் வேலைகளைப் பூர்த்தி செய்தல், இப்பிரதேச எல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு உதவுதல், போன்ற பல தீர்மானங்கள் இதன்போது மேற்கொள்ளப்பட்டன.

தனது பதவிக்காலத்தில் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தமது கூட்டுறவுச் சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்திருந்த நிதி தொடர்பிலும், தலைவர் இதன்போது ஒளித்திரை மூலம் காட்சிப்படுத்தினார்.
இந்நிலையில் இப்பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நடாத்தப்பட வில்லை கூட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நடாத்துமாறு சபை உறுப்பினர் ப.குணசேகரம் உரத்த குரலில் தெரிவித்தார்.
பின்னர் இதன் போது குழப்பநிலை ஏற்பட்டது. இது எனது தலைமையுரைக்கான நேரம் விரும்பினால் இருக்கலாம் முடியாதவர்கள் போகலாம் என தலைவர் இதன்போது தெரிவித்தார்.
பின்னர் தலைவரின் கூற்றை மீளப்பெறவேண்டும் என குணசேகரம் கேட்டுக் கொண்டதங்கிணங்க தலைவர் தனது கருத்து மீளப் பெறுகின்றேன் அனைவரும் அமைத்தியாக இருந்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க பின்னர் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

தமது கூட்டுறவுச் சங்கத்தினால் களுதாவளையில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சி மேற்கொண்டிருந்தோம்.
எனினும் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை தமது கிராமத்தில் அமைக்க வேண்டாம் என களுவதாவளைக் கிராமத்திலுள்ள சில பொது அமைப்புக்கள் தெரிவித்ததற்கிணங்க குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை மாங்காடு கிராமத்தில் அமைப்பதற்கு தாம்முயற்சி மேற்கொண்டு வருவதாக கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் மே.வினோராஜ் இதன்போது தெரிவித்தார்.

இது இவ்வாறு இருக்க மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் மேகசுந்தரம் வினோராஜ் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் என்பதோடு அவர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினராவார் அவர் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இரா.சாணக்கியனின் வெற்றிக்காக முன்னின்று செயற்பட்டவர்.
அதுபோல் ப.குணசேகரம் என்பவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எனபதோடு குணசேகரம் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஞா.சிறினேசனின் வெற்றிக்காக முன்னின்று செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


