வனஜீவராசிகள் திணைக்களத்தின் இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினரின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்றைய (24) தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.
சங்கத்தின் மட்டக்களப்பு தலைவர் இர்பான் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இவ்வார்ப்பாட்டமானது, மட்டக்களப்பு பஸ்நிலையம் இருந்து பேரணியாக கச்சேரி வரை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளுக்கு அவை இரத்துச் செய்யப்பட்டு காந்திப்பூங்காவில் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது மனித யானை மோதல்களைக் குறைக்க நாங்களும் பங்களிப்பவர்கள், எங்கள் பிரச்சனை அதிமேதகு ஜனாதிபதிக்கு, எங்கள் பிரச்சனையை ஜனாதிபதி அவர்களால் மாத்திரமே தீர்க்க முடியும், நிரந்தர நியமனம் இன்றி மாதம் 22500/- க்கு எங்கள் வேலை என்ற கோசங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நாட்டில் நிலவும் யானைப் பிரச்சனைகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளைப் பராமரிப்பதற்கென நாடு முழுவதும் 4731 உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டு தற்போது வரை 3530 உத்தியோகத்தர்கள் மாத்திரமே கடமைபுரிகின்றனர்.
அவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு சுமார் 5 வருடங்கள் ஆகியும் அடிப்படை வசதியின்றி நிரந்தரம் நியமனம் இன்றி இரவு பகலாக இற்றைவரை 22500 ரூபாய் பயிற்சி கொடுப்பனவை மாத்திரம் பெற்று கொண்டு சேவையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.











