காலாவதியான விசா அனுமதிகளின் கீழ் இலங்கையில் சட்டவிரோதமாக வசித்ததற்காக 22 இந்தியர்கள் கொண்ட குழுவை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் (10) கைது செய்துள்ளனர்.
இராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு அலுவலக வளாகத்தில் இருந்து இந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தக் குழு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து நாட்டிற்கு வந்திருந்ததுடன் அவர்களில் 17 பேர் சுற்றுலா விசாக்களிலும், 4 பேர் குடியிருப்பு விசாக்களிலும், ஒருவர் வணிக விசாவிலும் வந்திருந்தனர்.

இந்நிலையில் குடிவரவு புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்திற்கிடமான இரண்டு இந்திய பிரஜைகளிடம் திடீரென நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதிகாரிகள் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அவர்கள் தற்போது மிரிஹானாவில் உள்ள தற்காலிக தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் உடனடியாக இலங்கையிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.