ஒரு சில உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சி பலம் குறைந்துள்ள நிலையில், அந்தக் கட்சி ஏனைய கட்சிகளிடம் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இந்த பின்னணியில், சில உள்ளூர் சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு ஆளுங்கட்சி தமது உறுப்பினர்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
தமது உறுப்பினர்கள் பணத்துக்காக சோரம் போகமாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கட்சித் தலைமை அலுவலத்தில் இன்று (09) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

“ஒருசில உள்ளூராட்சி சபைகளில் எங்களின் உறுப்பினர்களை தவிர ஆளுங்கட்சிக்கு 23 ஆசனங்களும் எதிர்க் கட்சிக்கு 23 ஆசனங்களும் கிடைத்துள்ளன. எனவே, ஒருசில பகுதிகளில் எங்களின் உள்ளூராட்சி உறுப்பினர்களின் பங்களிப்பு மிக தீர்மானமிக்கதாக இருக்கிறது.
தற்போது பல்வேறு சூட்சுமங்களை பயன்படுத்தி எங்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் நிலைமைக்கு ஆளுங்கட்சி தள்ளப்பட்டுள்ளது. எனவே, எமது கட்சியிலுள்ள உறுப்பினர்கள் பணத்துக்கு சோரம் போகமாட்டார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதேபோன்று எந்தவொரு கட்சிக்கும் ஒத்துழைப்பு வழங்க நாங்கள் இதுவரையில் தீர்மானம் எடுக்கவும் இல்லை” என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.