யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 26 வயது யுவதியை 06 மாத காலத்திற்கு புனர்வாழ்வு அளிக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த யுவதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் அவரது உடைமையில் இருந்து 340 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன.
கைதான யுவதியிடம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் போதைப்பொருளை விற்பனை செய்யும் நோக்குடன் தான் உடைமையில் வைத்திருக்கவில்லை எனவும், தனது சொந்த பாவனைக்காகவே வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதனை அடுத்து அவரை பொலிஸார் வைத்தியசாலைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வேளை குறித்த யுவதி போதைக்கு அடிமையானவர் என உறுதிப்படுத்தப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் மருத்துவ அறிக்கையுடன் , யுவதியை பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (27) முற்படுத்திய வேளை , யுவதியை எதிர்வரும் 06 மாதங்களுக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.