ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுவினர் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (10) இடம்பெற்றது.
விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில், கொழும்பு ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்கள் பழனி திகாம்பரம் மற்றும் வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

கூட்டணி தரப்பின் தகவலின்படி, நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இரு தரப்பினரும் ஒத்துழைப்பை பற்றி கலந்துரையாடினர்.
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க நாளை (11) ரஷ்யா பயணிக்க உள்ளதால் இந்த சந்திப்பு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திப்பில் உள்ளூராட்சி விவகாரங்களைத் தவிர்ந்த வேறு விடயங்கள் பேசப்பட்டனவா என்ற கேள்விக்கு கூட்டணி தரப்பினர் பதிலளிக்க மறுத்தனர்.