இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் – கவுரிகுந்த் அருகே இடம்பெற்ற உலங்குவவானூர்தி விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (15) அதிகாலை டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கி பயணித்த உலங்குவானூர்தியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
குப்தகாஷிக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகொப்டர், கௌரிகுண்ட் அருகே காட்டுப்பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த உலங்குவானூர்தியில், ஒரு விமானி உள்ளிட்ட ஐந்து பெரியவர்கள் மற்றும் ஒரு சிறுவன் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹெலிகாப்டரில் இருந்த பயணிகள் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்திற்கு அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியில் வானிலை மிகவும் மோசமாக இருந்ததால், ஹெலிகொப்டர் வழி தவறி சென்றதாகக் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 12-ம் திகதி அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்த நிலையில் இந்த ஹெலிகொப்டர் விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதேசமயம் உத்தரகாண்டில் உள்ள சார் தாம் யாத்திரையின் ஒரு பகுதியாக கேதார்நாத்திற்கு புனித யாத்திரை சென்ற பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டரே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.