தமிழகம், கரூரில் இலங்கை பெண் ஒருவரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்த 92 வயதுடைய ஞான சௌந்தரி என்னும் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை வாழ்ந்துவந்துள்ளார். இவர்களது மகன்கள் மற்றும் மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால் ஞான சௌந்தரி மட்டும் வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளார்.
இவரது வீட்டில் கரூரைச் சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் (15) அதிகாலை ஞான சௌந்தரி படுக்கையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த வேலைக்கார பெண் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி உறவினர்களும் பொலிசாரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது மூதாட்டி அணிந்திருந்த கம்மல், செயின் உள்ளிட்ட 7 1/2 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டனர்.
பின்னர் மூதாட்டி உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு இதுகுறித்து வழக்குபதிவு செய்த பொலிசார், வேலைக்கார பெண்ணிலிருந்து முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்தனர்.

குறித்த விசாரணையில் 92 வயது மூதாட்டியை தலையணையை தலையில் அழுத்தி கொலைசெய்து விட்டு அங்கு இருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுவிட்டு, மூதாட்டி இயற்கை மரணம் எய்துவிட்டார் என பணிப்பெண் நாடகமாடியுள்ளது தெரியவந்துள்ளதுடன், குறித்த நகைகளை அவர் தனது 36 வயது மகனிடம் ஒப்படைத்திருந்த நிலையில், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்தபெண் இலங்கையைசேர்ந்தவர் என தற்போது மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், தங்க நகைகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.