கையூட்டல் ஒழிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளது.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டதுடன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட 3 பிரதிவாதிகளும் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.
தமது சேவை பெறுநரான எஸ்.வியாழேந்திரன், சிகிச்சைகளுக்காக எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வரை இந்தியாவுக்கு செல்ல வேண்டியுள்ளதாகப் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ மன்றுரைத்தார்.

எனவே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு, இதன்போது சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
எனினும் இதற்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் மன்றில் முன்னிலையான அதிகாரிகள் எதிர்ப்பை வெளியிட்டனர்.
சந்தேகநபர் வெளிநாட்டுக்குச் செல்வாராயின் அவரை மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
எனினும், இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதவான், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாகத் தளர்த்த உத்தரவிட்டுள்ளார்.








