இலங்கையில் பல்வேறு குற்றப் பின்னணி உள்ள மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்றபோது தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள நான்காவது மணல் திட்டில் வைத்து இந்திய கடலோர பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மரைன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரை உள்ள மணல் திட்டு பகுதிகளில் இந்திய கடலோர பொலிஸார் சோதனையில் ஈடுப்பட்ட வேளையிலே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மூவரையும் சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் 46,000 ரூபாய் என்பன கைப்பற்றப்பட்டன. இதன்போது மூவரையும் கைதுசெய்து தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 34, 43 மற்றும் 33 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் தமிழகத்திற்குள் ஊடுருவிய பின் அவர்கள் மூவரும் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்தனரெனவும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.








