ஏறாவூர் களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் இடம் பெற்ற வருடாந்த சடங்கின் போது தெய்வம் ஆடிய ஒருவர் திடிரென மயங்கிவீழ்ந்து உயிரிழந்ததுடன், ஒருவர் மீது தெய்வம் ஆடிய ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தியதையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை (10) இரவு 9.30 மணிக்கு இடம்பெற்றதையடுத்து அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி சிங்காரதோப்பு கிராமத்திலுள்ள பேச்சியம்மன் ஆலயத்தில் வருடாந்த திருவிழாவான இறுதி நாள் சடங்கு சம்பவதினமான நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது.

இதன் போது பக்தர்கள் ஆலயத்தினுள் தெய்வம்ஆடிக் கொண்டிருந்தபோது 37 வயதுடைய நிமலன் என்பவர் திடீரென மயங்கி வீழ்ந்ததையடுத்து அவர் அங்கு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அங்கு தெய்வம் ஆடிக் கொண்ட ஒருவர் மீது இன்னொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டதையடுத்து தாக்குதலை மேற்கொண்டவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.








