யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வை முகநூல் ஊடாக நேரலையில் ஒளிபரப்பிய அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினருக்கு மாநகர மேயரால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபையின் ஜூலை மாத அமர்வு மாநகர மேயர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில் நேற்று(16) மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
மாநகர சபை உறுப்பினர்களிடையே விவாதம் நடைபெற்ற நிலையில், சபை அமர்வில் பங்கேற்ற மாநகர சபை உறுப்பினர் இரத்தினம் சதீஸ் வெளியே சென்று பார்வையாளர் பகுதியில் இருந்து மாநகர சபை அமர்வை முகநூல் ஊடாக நேரலையில் ஒளிபரப்பியுள்ளார்.

இதனை அவதானித்த ஜனநாயகத் தமிழ்க் தேசியக் கூட்டணியின் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் குறித்த விடயம் தொடர்பில் மாநகர மேயரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.
சபை ஒழுங்கு விதிகளுக்கு மாறாக இந்த உறுப்பினர் செயற்பட்டமையால் அவருக்கு ஒரு மாதம் சபை அமர்வில் பங்கேற்கத் தடை விதிப்பது சம்பந்தமாக மேயர் சபை உறுப்பினர்களின் ஆலோசனையை கேட்டார்.
திடீரென எழுந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் இளங்கோவன், மேற்படி உறுப்பினர் புதிய உறுப்பினர் என்பதால் மன்னிப்பு வழங்குமாறு கோரியுள்ளார்.
இதையடுத்து ஏனைய கட்சிகளைச் சேர்ந்த சிலர் அந்த உறுப்பினரிடம் தன்னிலை விளக்கம் கோருமாறு கோரினர்.

இந்நிலையில், சபைக்குள் சென்ற சம்பந்தப்பட்ட உறுப்பினர் தான் ஊடகவியலாளர் எனக் கூறியதுடன் அடையாள அட்டை என்று ஒரு அட்டையையும் காண்பித்து, அதனால்தான் சபை அமர்வை நேரலை செய்தேன் என்று கூறியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் இருக்கும்போது உறுப்பினர் அவ்வாறு செயற்பட்டமை தொடர்பாகக் கடும் எச்சரிக்கை விடுத்த மாநகர மேயர், இனிமேல் இவ்வாறு சபை அமர்வில் நடந்தால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
மாநகர சபை உறுப்பினர் இரத்தினம் சதீஸ் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பிரிவு உறுப்பினர் ஆவார்.
அத்துடன் முகநூல் வாயிலாக நேரலை ஒளிபரப்புபவர். இம்முறை தேர்தலில் யாழ். மாநகர சபை உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








