நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த கன்சிகா என்ற மாணவி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்கள், மனித உடலின் உள் உறுப்புகள் பலவற்றின் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகவும் குறைந்த நேரத்தில் கூறியே அவர் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டம் கந்தப்பொல ரிலாமுல்ல தொடக்கப் பள்ளியில் 5ஆம் தரத்தில் இவர் பயின்று வருகிறார்.
குறித்த மாணவி, தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை 24 நொடிகளில் கூறியுள்ளதுடன், மனித உடலின் உள் உறுப்புகள் 168 இன் பெயர்களைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 4 நிமிடங்களில் கூறியுள்ளார்.
இவரது இந்த முயற்சியானது சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாக வாணி ராஜா மற்றும் கண்டி மாவட்டத் துணைத் தலைவர் சந்திரமோகன் முன்னிலையில் நடைபெற்றது.

மாணவியின் முயற்சியை மிகவும் உன்னிப்பாக கண்காணித்த நடுவர்கள் அதை உலக சாதனையாக அங்கீகரித்தார்கள்.
சோழன் உலக சாதனை படைத்த மாணவி கன்சிகாவிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், பேட்ச் மற்றும் பைல் போன்றவை நடுவர்கள் மற்றும் முதன்மை விருந்தினரான வலயக் கல்வி அலுவலக இயக்குநர் திசாநாயக, பாடசாலையின் தலைமை ஆசிரியர் விஜேந்திரன் போன்றோரினால் வழங்கிப் பாராட்டப்பட்டது.
சோழன் உலக சாதனை படைத்த மாணவியை வலயக் கல்வி அலுவலக இயக்குநரும் மற்றும் பாடசாலையின் தலைமை ஆசிரியரும் வாழ்த்திச் சிறப்புரையாற்றினார்கள்.
சோழன் உலக சாதனை படைத்த மாணவியை சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.
இந்நிலையில் குறித்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








