பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம் பெற்று வரும் நிலையில் தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.
இதன்போது, இந்த அரசாங்கங்கள் பல வாக்குறுதிளை வழங்கி அவற்றை செய்து வந்தாலும் தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் முற்றிலும் மறந்துவிட்டது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இந்த சட்டமூலத்தில் எவ்விதமான பரிந்துரைகளும் முன்வைக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் சம்பளவிவகாரம் பற்றி உங்களுக்கு நினைவிருக்கின்றதா? என கேள்வியெழுப்பினார்.

அவர்களும் இந்த நாட்டில் தான் வாழ்கின்றார்கள். தேயிலை, றப்பர், தென்னை போன்ற பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கடந்த அரசாங்கத்தின் மூலம் 1700 ரூபா அடிப்படை சம்பளமாக பெற்றுக்கொடுக்கப்பட்டது. ஆனால், 1350 ரூபா மாத்திரமே சம்பளமாக வழங்கப்படுகின்றது.
இதற்கு ஒரு நியாயமான தீர்வு வேண்டும். ஏன் அவர்களுக்கு இவற்றை செய்ய முன்வராமல் பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள் எனவும் தனது கேள்விகளை முன்வைத்தார்.
வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு பதிலளித்து கொண்டிருந்த அமைச்சர், தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் போதாது என்பதை நாங்கள் அறிவோம். எனினும், அந்த தரப்பினர் சம்பள நிர்ணய சபைக்கு உள்ளே வருகின்றனர். ஆகையால், சம்பள அதிகரிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றார்.
எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். அவர்களின் 25 வேலைநாட்களை அடிப்படையாக கொண்டு அதற்கு ஏற்றாற்போல் சம்பளத்தை வழங்க தீர்மானம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றோம்.
நாளொன்றுக்கான அடிப்படை சம்பளம் 1350 ரூபா அத்துடன் 350 ரூபா வழங்கப்படுகிறது. ஒரு மாதத்தில் 25 நாட்கள் வேலை செய்தால், 1350×25= 33750 ரூபாயாகும் இது, ஏனைய தரப்பினரின் சம்பளத்தை விடவும் அதிகமாகும் என தெரிவித்தார்.
எதிர்க்கட்சியின் தரப்பில் இருந்த மனோ கணேசன் உள்ளிட்டவர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதன்போது சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.








