சர்வதேச லயன்ஸ் கழகம் – மாவட்டம் 306டி, 10 இற்கான புதிய ஆளுநர் பதவி ஏற்பு விழா, மட்டக்களப்பில் அமைந்துள்ள பாசிக்குடா சுற்றுலா விடுதியில் விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவில் புதிய மாவட்ட ஆளுநராக தெரிவு செய்யப்பட்ட லயன் க. லோகேந்திரன் தலைமையிலான நிகழ்வு, கழகத்தின் திட்ட வழிகாட்டுதலின் கீழ் நடைப்பெற்றது. பிரதம அதிதியாக முன்னாள் சர்வதேச இயக்குனர் லயன் மகேஸ் பஸ்கால் கலந்து கொண்டு சிறப்பித்தார். கலாச்சார முறைப்படி மேளதாளம் மற்றும் வாத்தியக் குழுவுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 52 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வரும் லயன்ஸ் கழக வரலாற்றில், சர்வதேச ரீதியில் முதன்முறையாக மாவட்ட ஆளுநராக லயன் க. லோகேந்திரன் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட முதலாம் ஆளுநர் சாகீர் அகமட் மற்றும் இரண்டாம் ஆளுநர் ரி. ஆதித்தனின் பங்கேற்புடன், கழக அமைச்சரவை உத்தியோகத்தர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
கழக செயலாளர் M.T.M. அனாப் மற்றும் பொருளாளர் குணராஜா ஆகியோருக்கு, மாநில ரீதியிலான பொறுப்புகள் ஆளுநரால் ஒப்படைக்கப்பட்டன.
சுகாதார சேவைகள், சமூக நலன் திட்டங்கள் உள்ளிட்ட பலவகை சேவை திட்டங்களை மாவட்ட ரீதியில் விரிவாக்கும் நோக்குடன் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. இளம் உறுப்பினர்களை இணைத்து கழகங்களை வலுப்படுத்தும் முன்மொழிவும் வைக்கப்பட்டது.
தமது உரையின் போது, லயன் க. லோகேந்திரன் தம்மை ஆளுநராக தேர்வு செய்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, எதிர்காலத்தில் புதிய சேவைகள் மற்றும் திட்டங்களை முன்னெடுக்க அனைத்து கழகங்களின் ஒத்துழைப்பையும் கேட்டுக்கொண்டார்.
அமரர் லயன் பா. நிரோசனின் நினைவாக, அவருக்கான நினைவு சின்னம் வாழைச்சேனை லயன்ஸ் கழகத் தலைவர் ச. கார்த்தீபனிடம் வழங்கி வைத்தார். குறித்த நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் லயனஸ் கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.























