காசா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அல் ஜசீரா ஊடகவியலாளர் அனஸ் அல்-ஷெரீப் மற்றும் அவரது சக ஊழியர்கள் நான்கு பேர் உயிரிழந்ததாக BBC தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் ஊடகவியலாளர் முகமது கிரீக், கேமராமேன் இப்ராஹிம் ஜாஹர், முகமது நௌபால், மோமென் அலிவா ஆகியோர்.
அல் ஜசீரா கூறுகையில், தாக்குதல் மருத்துவமனை பிரதான வாயிலில் ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த கூடாரத்தை நேரடியாக குறிவைத்ததாகும். அமைப்பு இதை “இலக்கு வைக்கப்பட்ட படுகொலை” என்றும், பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல் என்றும் கண்டித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) அல்-ஷெரீப்பை குறிவைத்ததை உறுதிப்படுத்தி, அவர் ஹமாஸ் இராணுவ பிரிவின் தலைவராக இருந்ததாக குற்றம் சாட்டியது. ஆனால், ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ) இதற்கான ஆதாரங்களை வழங்கத் தவறியதாகவும், இது பத்திரிகையாளர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வழக்கமான நடைமுறையின் ஒரு எடுத்துக்காட்டு எனவும் தெரிவித்துள்ளது.

அல் ஜசீரா நிர்வாக ஆசிரியர் முகமது மோவாட், அல்-ஷெரீப் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர் என்றும், காசா நிலவரத்தை உலகிற்கு தெரிவிக்கும் முக்கிய குரல் என்றும் கூறினார். காசாவிற்குள் சர்வதேச ஊடகவியலாளர்கள் நுழைவதை இஸ்ரேல் தடை செய்துள்ளதால், பல ஊடகங்கள் உள்ளூர் செய்தியாளர்களையே நம்புகின்றன.
அல் ஜசீரா, தாக்குதலில் மொத்தம் ஏழு பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. CPJ தரவுகளின்படி, 2023 அக்டோபரில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல் தொடங்கியதிலிருந்து காசாவில் 186 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவில் பத்திரிகையாளர்கள் விமானத் தாக்குதல்களுடன் பட்டினியாலும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக, பல சர்வதேச ஊடகங்களும் மனித உரிமை அமைப்புகளும் எச்சரித்துள்ளன. 100-க்கும் மேற்பட்ட அமைப்புகள் காசாவில் கடும் உணவுக் குறைபாடு நிலவுவதாக கூறினாலும், இஸ்ரேல் உதவி பொருட்கள் நுழைவதை கட்டுப்படுத்தி, தொண்டு நிறுவனங்களை “ஹமாஸ் பிரச்சாரத்திற்கு துணைபுரிவதாக” குற்றம் சாட்டி வருகிறது.








