முல்லைத்தீவில் அண்மையில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் இலங்கை இராணுவ உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய இராணுவத்தினரே சட்டமும் ஒழுங்கும் மீறி இப்படிப்பட்ட கொடூரச் செயல்களில் ஈடுபட்டிருப்பது நாட்டின் சட்ட அமுலாக்கத்தில் நிலவும் ஆழமான சீர்கேட்டை வெளிப்படுத்துவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கட்சியின் செயலாளர், இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) அறிவித்துள்ள திங்கட்கிழமை 18 ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், அரசு இஸ்ரேலிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா விலக்கு வழங்கியிருப்பது கவலைக்குரியதாகக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியதாக பரவலாக குற்றம் சாட்டப்படும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) உறுப்பினர்கள் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கக் கூடும் என்பதால், இது பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில்,
“இது நீதி, பொறுப்புகூறல், மற்றும் இராணுவத்தினுள் நிலவும் தண்டனையற்ற சூழ்நிலைக்கு முடிவுகோரும் அமைதியான எதிர்ப்பாகும்,” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனுடன், வடகிழக்கில் உள்ள முஸ்லிம் சமூகத்தினரையும் திங்கட்கிழமை காலை நேரத்தில் தங்கள் கடைகள் மற்றும் தொழில்களை மூடுவதன் மூலம் இந்த ஒற்றுமை ஹர்த்தாலில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் முஸ்லிம் என அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து வன்முறையை நிராகரித்து, அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.








