நோர்வேயின் வருங்கால மன்னரான இளவரசர் ஹாக்கோனின் வளர்ப்பு மகனும், பட்டத்து இளவரசி மெட்டே-மாரிட்டின் மகனுமான மாரியஸ் போர்க் ஹாய்பி மீது, 4 பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட மொத்தம் 32 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரம், அரச குடும்பத்தின் மீது படிந்த ஒரு பெரும் களங்கமாகப் பார்க்கப்படுகிறது.
மாரியஸ் போர்க் ஹாய்பி, இளவரசி மெட்டே-மாரிட், இளவரசர் ஹாக்கோனை திருமணம் செய்வதற்கு முன்பு, அவருக்குப் பிறந்த மகன். நோர்வேயின் அரியணைக்கு வாரிசாக இல்லாதபோதும், அரச குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்ததால், இவருக்கு பெரும் சிறப்புரிமைகள் உண்டு.
ஆனால், இவரது வாழ்க்கை எப்போதும் சர்ச்சைகளுடனேயே இருந்துள்ளது. போதைப்பொருள் பயன்பாடு, குற்றவாளிகளுடன் தொடர்பு என இவரது கடந்தகாலம் மிகவும் மோசமானதாகவே உள்ளது.

நான்கு வெவ்வேறு பெண்கள் அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது பாலியல் வன்கொடுமை செய்ததாக மாரியஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இந்தச் செயல்களை ரகசியமாக வீடியோ எடுத்ததாகவும், புகைப்படங்கள் எடுத்ததாகவும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தனது முன்னாள் காதலியான தொலைக்காட்சி நட்சத்திரம் நோரா ஹாக்லாந்தை (Nora Haukland) தொடர்ந்து தாக்கியதாகவும், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றங்கள் கடந்த 2018 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாரியஸ் மீதான வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், மாரியஸ் போர்க் ஹாய்பிக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

இந்த நிலையில் “அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எந்தச் சலுகையும் இருக்காது என வழக்கறிஞர்கள், திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். எனினும் “இது நீதிமன்றம் பார்க்க வேண்டிய விஷயம். வேறு கருத்து இல்லை என அரச குடும்பம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு, நார்வேயின் அரச குடும்பத்தின் புகழுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில் இளவரசி மெட்டே-மாரிட்டின் பின்னணி சர்ச்சைக்குரியதாக இருந்த நிலையில், தற்போது அவரது மகனின் இந்தச் செயல், மீண்டும் ஒருமுறை அரச குடும்பத்தின் மரியாதையை கேள்விக்குறியாக்கியுள்ளது.








