மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையிலிருந்த நீர் பவுசர் வாகனத்தை பெற்றுச் செல்ல நேற்று (20) காலை செங்கலடி பிரதேச சபைக்கு வருகை தந்த வெலிமடை பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் சம்பந்தப்பட்ட ஆவணங்களை காட்டி வாகனத்தை வழங்குமாறு கோறியுள்ளனர்.

தற்போதைக்கு ஒரு மக்கள் சேவைக்கு ஒரு நீர் பவுசர் மாத்திரமே உள்ளது அதை வழங்க முடியாது என செங்கலடி தவிசாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று பி.பகல் வரை பல மணி நேர பேச்சுவார்த்தையின் பின் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற வெலிமடை பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்டோர் ஏறாவூர் பொலிசாருடன் செங்கலடி பிரதேச சபைக்கு வருகை தந்திருந்தனர்.
பொலிசாருக்கும் செங்கலடி தவிசாளருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சரியான ஆவணங்களை வெலிமடை பிரதேச சபை வைத்திருப்பதையிட்டு இணக்கப்பாட்டுடன் வாகனத்தை வழங்க முன்வந்தனர்.

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபைக்கு கடந்த 2018 ம் ஆண்டு வழங்கப்பட்ட 13000 லீற்றர் கொள்ளளவு கெண்ட நீர் பவுசரை நேற்று வெலிமடை பிரதேச சபைக்கு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக வெலிமடை பிரதேச சபை செயலாளரிடம் ஏறாவூர் பற்று பிரதேச சபை செயலாளர் அவர்கள் கையளித்தார்.
இது தொடர்பாக செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் திரு.மு.முரளிதரன் கருத்து தெரிவிக்கையில்,
வறட்சி காலத்தில் செங்கலடி பதுளை வீதி மக்களுக்காக நாள் ஒன்றிற்கு ஒன்று கிட்டதட்ட 100,000 லீற்றர் குடிநீரினை வழங்கி வருகின்றோம். இருப்பினும் எங்களிடம் உள்ள வாகன வசதி தற்போது பற்றாக்குறையாகவே உள்ளது. இது இவ்வாறு இருக்க இச்சுழ்நிலையில் 13000 கொள்ளளவு கொண்ட நீர் பவுசரினை மீழ பெற்று வெலிமடை பிரதேச சபைக்கு வழங்கிய நடவடிக்கை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதற்குரிய பதிலிட்டு வாகனமொன்றை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வழங்க மறுக்கும் பட்டசத்தில் பதுளை வீதி மக்களுக்கு போதியளவான குடிநீரினை வழங்கும் சேவை சாத்தியமில்லாமல் போகும் நிலை வரும் என தெரிவித்தார்.
அல்லாவிடின் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் செங்கலடி பிரதேச செயலமும் இணைந்து மக்களுக்கான குடிநீரை வழங்க வேண்டும் எனவும் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன், மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் செய்யப்பட்டுள்ளனர். ஏன் அந்த பவுசரினை ஏறாவூர் பற்று பிரதேச சபையில் இருந்து வெலிமடை பிரதேச சபைக்கு மாற்றினார்கள் என்ற கேள்வி உள்ளது.
எங்களுக்கு இந்த செயற்பாட்டில் அரசியல் உள்ளதாக தெரிகின்றது. மட்டக்களப்பு மக்கள் மக்கள் இல்லையா?
கோப் குழுவில் எடுக்கப்பட்ட முடிவு எனக்கூறி அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கமைய இந்த பவுசர் வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிசாருடன் வந்து இந்த பவுசரை எடுத்துச் செல்கின்றனர். நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் மக்களுக்கு குடிநீரை எவ்வாறு வழங்குவது. இதற்கான மாற்று வழி என்ன? அரசாங்கம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் இது தொடர்பில் உடன் கவனமெடுக்க வேண்டும் எனவும் நிலாந்தன் தெரிவித்தார்.








