பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த தபால் ஊழியர்கள், தங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிட்டு, திட்டமிட்டபடி தங்கள் கடமைகளை இன்று (24) மாலை 4.00 மணி முதல் மேற்கொள்ள இணங்கியுள்ளதாக, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் இடையில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலுக்குப் பின்னர், அமைச்சர் ஊடகங்களுக்கு இதனை குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் கருத்து வௌியிட்ட பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் தபால் தொழிற்சங்கத்தினர், கலந்துரையாடலில் ஏற்பட்ட விடயங்கள் தொடர்பான எழுத்து மூலமாக வழங்கப்படும் வரையில் தமது தொழிற்சங்க போராட்டம் தொடரும் என கூறியுள்ளனர்.
கலந்துரையாடலின் இறுதி முடிவு தொடர்பின் இன்னும் கூற முடியாது. ஒரு சில விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் அவை எழுத்துப்பூர்வ ஆவணமாக வழங்கப்பட வேண்டும் என பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் தபால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
19 கோரிக்கைகளை முன்வைத்து தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்கள் உட்பட பல தொழிற்சங்கங்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளன.
இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதுடன் இலட்சக்கணக்கான கடிதங்கள் தேங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.








