கடுவலை, வெலிவிட்ட பகுதியில் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வெல்லம்பிட்டி கல்முல்ல பகுதியைச் சேர்ந்தவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 12 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம மேல் நீதிமன்றம் நேற்று (26) உத்தரவிட்டது.
மேலும் சந்தேக நபருக்கு 20,000 ரூபாய் நீதிமன்றக் கட்டணம் விதிக்கப்பட்டதோடு, பணத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவருக்கு 300,000 ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் அதை கொடுக்கத் தவறினால் மேலும் ஒரு வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சிறுமி புறக்கோட்டைக்குச் சென்ற போது குறித்த சந்தேக நபர் கடுவலை வெலிவிட்ட பகுதியிலுள்ள உறவினர் வீட்டுக்கு பாதிக்கப்பட்ட சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை ஆதாரங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








