மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் மட்பாண்ட குடிசைக் கைத்தொழில் தொழில் செய்பவர்களுக்கான களி மண்ணை பெறுவதில் பாரிய சவால் உள்ளதாகவும் ஏறாவூர் பற்று பிரதேச சபை ஊடாக களி மண்ணை கொண்டு வருவதற்கான முறையான அனுமதியை பெற்று தருமாறு சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் உள்ள ஐயன்கேணி மணியபுரம் கிராமத்தில் உள்ள மட்பாண்டம் செய்யும் குடும்பங்களுக்கான நிதி உதவிகளை வழங்கி வைத்த போதே மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
ஐயன்கேணி மணியபுரம் கிராமத்தில் மட்பாண்ட செய்யும் 30 குடும்பங்களுக்கான வட்டி அற்ற கடன் உதவிகள் சேவகம் தொண்டு நிறுவனத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.
ஏற்கனவே 15 குடும்பங்களுக்கான கடனுதவிகள் வழங்கி வைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் பிரான்ஸ் துளிர் அமைப்பின் நிதி உதவியில் சேவகம் நிறுவனத்தின் ஊடாக மேலும் 15 குடும்பங்களுக்கான கடனுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது கருத்து தெரிவித்த மட்பாண்ட உற்பத்தியாளர்கள்,

தங்களது மாதாந்த வாழ்வாதாரத்திற்கான கைத்தொழிலாக நாங்கள் மட்பாண்டங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம்.
ஆனால் எமது தொழிலை தொடர்ச்சியாக செய்ய முடியாத நிலை உள்ளது. காரணம் எங்களால் தொடர்ச்சியாக களி மண்ணை பெற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது.

களிமண்ணை கொண்டு வந்து தருபவர்கள் தற்போது களிமண் ஏற்ற அனுமதி இல்லை என்றும் தெரியாமல் ஏற்றிவருவதாக கூறி களிமண்ணின் விலைகளை அதிகரித்து விட்டனர் அத்துடன் நல்ல களிமண்ணை அவர்கள் கொண்டுவருவதில்லை இதனால் எமது தொழில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி தொழில் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.
எனவே ஏறாவூர் பற்று பிரதேச சபை ஊடாக களி மண்ணை பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை பெற்று தருமாறு கேட்டுக் கொள்கின்றோம். என தெரிவித்தனர்.
இன் நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் மேற்படி உதவிகளை வழங்கி வைத்ததோடு. இன் நிகழ்வில் சேவகம் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் த.தர்சன், பொருளாளர் கு.சுபோஜன், உறுப்பினர் அ.ஜெயராஜ், வர்த்தகரும் சமுகசேவகருமான உமா சேகரன் மற்றும் நாகபூசணி அம்மன் ஆலய செயலாளர் சுதர்சன் மட்பாண்ட உற்பத்தியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

























