நுண்கடன்காரணமாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் 22பேர் தற்கொலைசெய்துகொண்டுள்ளதாக பிரதேசசபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் அனுமதியின்றி செயற்பட்ட நுண்கடன் நிதி நிறுவனங்களை மூடும் செயற்பாடுகள் பிரதேசசபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜினால் இன்று (18) முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம், கோட்டைக்கல்லாறு ஆகிய பகுதிகளில் இன்றைய தினம் தவிசாளரினால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.


இதன்போது பிரதேசசபையின் வியாபார பதிவுச்சான்றிதழ் பெறாத நுண்கடன் நிறுவனங்களை முடிய தவிசாளர், பிரதேசசபையின் அனுமதியைப்பெற்ற பின்னரே நிறுவனங்களை திறக்கமுடியும் என தெரிவித்தார்.
அத்துடன் நிதி நிறுவனங்களை அழைத்து சில விதிமுறைகளை வழங்கியதாகவும் அந்த விதிமுறைகளை மீறிய வகையில் செயற்படும் நிதி நிறுவனங்களையும் மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் தெரிவித்தார்.
சில நிறுநிறுவனங்கள் வருடாந்த வட்டி வீதத்தினை120 வீதம் அறிவீடும் நிலைமை காணப்படுகின்றது. மத்திய வங்கியினால் குறைந்தது 18வீதமே வட்டி அறிவிடமுடியும் என கூறியுள்ள நிலையிலும் இவ்வாறு அதிக வட்டிகளை மக்களிடம் கோரிவருவதாகவும் தவிசாளர் இதன்போது தெரிவித்தார்.








