இந்த நாட்டில் கொள்ளையுகம் பூர்த்தியாகவும், மக்களின் அனைத்துவிதமான நன்மைகளையும் பூர்த்திசெய்யும் விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிலைமையினை மாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளை மக்கள் முறியடிப்பார்கள் எனவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்தகால யுத்தசூழ்நிலையின்போது கைவிடப்பட்டிருந்த களுவாஞ்சிகுடி பிரதான தபாலகத்திற்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (18) நடைபெற்றது.
கடந்தகாலத்தில் பல்வேறு தரப்பினரிடமும் குறித்த கட்டிடத்தினை அமைத்துதருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளபோதிலும் இதுவரையில் அமைக்கப்படாத நிலையில் சுமார் 35வருடத்திற்கு பின்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதற்கான வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய கட்டிட நிர்மாணப்பணியை ஆரம்பித்துவைத்தார்.
சுமார் 30 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டினை களுவாஞ்சிகுடி பிரதான தபால் நிலையத்தினை அமைப்பதற்கு தபால் திணைக்களம் ஒதுக்கீடுசெய்துள்ளது.
இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு , கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெந்தலால் ரத்னசேகர, மண்முனை தென் எருவில் பற்று தவிசாளர் மே.வினோராஜ், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் யு.உதயசிறிதர், பிரதி அஞ்சல் மா அதிபர் உசித்த உலங்கமே, கிழக்கு மாகாண பிரதி தபால் மா அதிபர் சி.பிரகாஷ், மற்றும், அரச உயர் அதிகாரிகள், தபால் நிணைக்கள அதிகாரிகள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.








