திருடர்கள் யார்? நல்லவர்கள் யார்? என்று மக்கள் தெரிந்துகொண்டுவிட்டார்கள் ஆகவே இந்த திருட்டு கூட்டத்திற்கு மீண்டும் மக்கள் ஆதரவு வழங்கப்போவதில்லை. இனி இந்த திருடர்களால் நாட்டை உருவாக்க முடியாது என்பதனை நாங்கள் நிரூபித்து காட்டி இருக்கின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
மக்களினால் நிராகரிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் மாநாட்டில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கும் செயற்பாடுகளை மக்கள் நிராகரிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் பதவி ஏற்று ஒரு வருட கால நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பில் இருந்து கண்டி ஊடாக கம்பளைக்கான புதிய பேருந்து சேவை நேற்று (21) மாலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் இருந்து மாலை 2 மணிக்கு வைபவ ரீதியாக இந்த சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த பேருந்து சேவையானது 20 வருடங்களின் பின்னர் மீண்டும் நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துச்சபையின் முகாமையாளர் த.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், இலங்கை போக்குவரத்துசபை சாலை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பில் இருந்து மாலை 3.15 மணிக்கு இந்த பஸ் புறப்படும் எனவும், கம்பளையில் இருந்து அதிகாலை 5 மணிக்கும் புறப்படவுள்ளதுடன், ஆசன முன்பதிவுகள் இன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பேருந்து சேவை இன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பிரபு,
ஜனாதிபதி இந்த நாட்டை பொறுப்பேற்று ஒரு வருட காலம் கடந்திருக்கின்றது. இந்த ஒரு வருட காலத்துக்குள் பல வேலை திட்டங்களை முன்னெடுத்து இருக்கின்றோம். அதனைப் போன்று ஒரு குடும்பத்தின் தலைவர் தகப்பன் அந்த குடும்பத்தை எந்த அளவு அன்போடும் அந்த குடும்பத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு துணையாக இருக்கின்றாரோ அதேபோன்று இந்த நாட்டின் ஜனாதிபதி அனுகுமார திசாநாயக்க அவர்கள் இந்த நாட்டு மக்களை தனது பிள்ளைகள் போன்று இந்த நாட்டை முன்னேற்றிக் கொண்டிருக்கின்றார்.

இதனைப் பொறுத்துக் கொள்ளாத எதிர்க்கட்சியினர் நேற்றைய தினம் ஒன்று கூடி அதில் அலிபாபாவும் 40 திருடர்களும் என்பது போன்று அந்த திருடர் கூட்டம் ஒன்றாக சேர்ந்து இருக்கின்றது. ஒன்றாக சேர்ந்து அதிலே இந்த காலகட்டத்தில் மக்களால் வெறுக்கப்பட்ட கட்சி ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவுக்காக இவர்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றார்கள்.
இதில் மொட்டு கட்சியை சார்ந்தவர்களும் சுதந்திர கட்சியைச் சார்ந்தவர்களும் அதனைப் போன்று திகாம்பரம், ஹிஸ்புல்லா போன்ற தலைவர்களும் அங்கு ஒன்று கூடி இருந்தார்கள். இவர்கள் எதிர்பார்ப்பது இந்த நாட்டை மீண்டும் ஒரு மோசமான சூழ்நிலைக்கு அதள பாதாளத்திற்கு கொண்டு சேர்த்து இந்த நாட்டை ஒரு வங்குரோத்து அடைந்த நாடாக மாற்றுவதற்கு இவர்கள் மீண்டும் முயற்சி செய்கின்றார்கள்.

இந்த தலைவர்கள் தான் கடந்த காலங்களில் இந்த நாட்டை ஆட்சி புரிந்தவர்கள். இவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் தான் இந்த நாடு இருந்தது. இதன் விளைவு என்ன இடம் பெற்றது என்பதனை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். இறுதியாக இந்த நாடு வங்குரோத்து நிலைக்கு செல்லப்பட்டது. ஆகவே இந்த நாட்டை நாங்கள் பொறுப்பேற்ற போது இவர்கள் பல விடயங்களை முன்னெடுத்திருந்தார்கள்.
நாங்கள் மதஸ்தலங்களை மூடப் போவதாக குறிப்பிட்டு இருந்தார்கள். மீண்டும் ஒரு வரிசையுகம் உருவாகும் என குறிப்பிட்டு இருந்தார்கள். மக்கள் தங்களது வாழ்க்கையை முன்னெடுக்க முடியாத நிலைக்கு கொண்டு வருவார்கள் என குறிப்பிட்டு இருந்தார்கள் இவ்வாறு பல பொய்களை ஒப்புவித்து தான் இவர்கள் தங்களது செயல்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள்.

இப்போதும் பல பொய்களைக் கூறிக்கொண்டு அவர்கள் தங்களது முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். ஆனால் மக்களுக்கு நன்றாக புரிந்து விட்டது இந்த திருடர் கூட்டத்தை ஒரு பக்கமும், தேசிய மக்கள் சக்தியை இன்னும் ஒரு பக்கமும் பிரித்துக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் இன்று மக்களுக்கு விளங்கி இருக்கின்றது.
ஆகவே இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் தெரிந்திருக்கின்றார்கள் திருடர்கள் யார்? நல்லவர்கள் யார்? என்று ஆகவே இந்த திருட்டு கூட்டத்திற்கு மீண்டும் மக்கள் ஆதரவு வழங்கப்போவதில்லை. இனி இந்த திருடர்களால் நாட்டை உருவாக்க முடியாது என்பதனை நாங்கள் நிரூபித்து காட்டி இருக்கின்றோம்.
நாங்கள் ஒரு சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் செயல்பட்டு கொண்டிருக்கின்றோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் இந்த நாடு முன் புறமாக பொருளாதாரத்தில் சிறப்பு அடைந்து கொண்டிருக்கின்றது. அந்நிய செலாவணியை உழைத்து தரக்கூடிய சுற்றுலாத்துறை பாரியளவு வளர்ச்சி அடைந்திருக்கின்றது.

அதனைப் போன்று ஏற்றுமதியை துறைகளும் இன்று வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றது.
அதுவே இந்த நாடு பொருளாதாரத்தில் ஸ்திரமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது. அரசியல் ஸ்த்திரத்தன்மை ஊடாக வெளிநாட்டு நிறுவனங்களும், வெளிநாட்டு அரசு தலைமைகளும் எங்கள் நாட்டு தலைவர் மீது அக்கறையோடும் ஒன்று இணைந்து செயல்படுவதற்கு தயாராக இருக்கின்றார்கள். ஆகவே இதன் ஊடாக விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது இந்த நாடு இன்னும் முன்னோக்கி நகர்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகமும் முன்முறமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை.
ஆகவே மக்கள் விரும்புகின்ற மக்களால் ஆளப்படுகின்ற ஒரு நாடாக இன்று நாங்கள் ஆட்சி புரிகின்றோம் ஆகவே தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் தொடர்ச்சியாக தனது கடமையை முன்னோக்கி செய்து கொண்டிருக்கின்றது. எதிர்க்கட்சியின் இந்த பொய்களை மக்கள் நம்ப தயாராக இல்லை என்கின்ற விடயத்தையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.என்றார்.









